கல்லூரிக் காலங்களில் இருந்தே காதல் கவிதைகளிலும், காதல் கதைகளையும் தாமரை இலை தண்ணீராய்த் தான் ரசித்து வந்திருக்கிறேன்...இன்றளவும் அவ்வாறே உணர்கிறேன். சமுதாயத்தை மையப்படுத்தும் கவிதைகளே என்னை எளிதில் கவர்ந்திருக்கின்றன.(அதெல்லாம் அனுபவித்திருந்தால் தெரியும் என்கிறீர்கள்..புரிகிறது).
சில சமயங்களில் அபூர்வமாய் காதல் கவிதைகளும் என் மனதில் இருக்கை கேட்டதுண்டு. அப்படி ஒரு படைப்பு இங்கே. படைப்புக்கு சொந்தக்காரர் தபூ.சங்கர்.
அன்று
நீ குடை
விரித்ததற்காக
கோபித்துக் கொண்டு
நின்றுவிட்ட
மழையைப்
பார்த்தவனாகையால்
இன்று
சட்டென்று மழை
நின்றால்
நீ எங்கோ குடை
விரிப்பதாகவே
நினைத்துக்
கொள்கிறேன்.
இதைப்போல் முன்பொரு முறை அறிமுகமாகி, ஆனால் இந்த நிமிடம் வரை புத்தம் புதிதாகவே நான் உணர்கிற பாரதியின் இந்த வரிகள்...'அடடா இந்த பீலிங்-க மிஸ் பண்ணிட்டியேடா கணேசா' என்று உச் கொட்ட வைக்கின்றன.
சுட்டும் விழிச்சுடர்தான் - கண்ணம்மா!
சூரிய சந்திரரோ?
வட்டக் கரியவிழி - கண்ணம்மா!
வானக் கருமைகொல்லோ?
பட்டுக் கருநீலப் - புடவை
பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் - தெரியும்
நட்சத்திரங்களடீ
சோலை மலரொளியோ - உனது
சுந்தரப் புன்னகைதான்?
நீலக் கடலலையெ - உனது
நெஞ்சி லலைகளடீ!
கோலக் குயிலோசை - உனது
குரலி னிமையடீ!
வாலைக் குமரியடீ! - கண்ணம்மா!
மருவக் காதல்கொண்டேன்.
Monday, August 27, 2007
ஆதலினால் காதல் செய்வீர்!!!
Posted by மா.கணேஷ் குமார் at 7:32 PM 3 comments
Saturday, August 25, 2007
என்று தணியும் உங்கள் குருதி தாகம்?
கோயம்புத்தூர், மும்பை...இப்போது ஹைதராபாத். பயங்கரவாதத்தின் இரத்த தாகத்திற்கு நம் சகோதரர்கள் 41 பேரை இன்று இழந்திருக்கிறோம். வெறித்தனம்,வன்முறை,பயங்கரவாதம்,தீவிரவாதம்...இப்படி எந்த பெயர் வேண்டுமானால் இருக்கட்டும். என்னால் இதை சுத்தமான 'கோழைத்தனம்' என்றுதான் அழைக்க முடிகிறது. ஏ கோழைகளே! விடுமுறையை கொண்டாட லேசர் ஷோ பார்க்க வந்த சிறுமி,தன் இரவு உணவை சாப்பிட்டு கொண்டிருந்த இளைஞன் - இவர்கள் எப்படி உங்கள் லட்சியத்திற்கு
குறுக்கே வந்தார்கள்? இப்படி நீங்கள் அடைய விரும்புவது எதை?
இதற்கு மூலகாரணம் அந்நிய சக்திகளாகவே இருக்கட்டும். ஆனால் அவர்கள் கொடுக்கும் சில பல லட்சங்களுக்கு துணை போகும் நமக்குள் ஒளிந்திருக்கும் அந்த களைகள் தான் முதலில் களையப்பட வேண்டியவை.
இந்த வழக்குக்கு தீர்வு சொல்ல எப்படியும் இன்னும் 10,12 வருடங்கள் ஆகும். இதற்குள் குற்றவாளிகளுக்கு மதச்சாயம் பூசி அவர்கள் செயலை நியாயப்படுத்த சில அரசியல் கட்சிகள் இப்போதே தயாராகி கொண்டிருக்கும். ஆனால் இந்த வெடிகுண்டின் வெளிச்சத்தில் இருட்டாகி போன இந்த குடும்பங்களுக்கு என்ன தான் தீர்வு?
உதயம் தியேட்டர் அருகில் காசு குறைத்து கேட்டதற்காக எல்லார் முன்பும் என்னை அசிங்கமாக திட்டிய ஆட்டோக்காரனைக் கூட என்னால் சத்தியமாக இந்த சம்பவத்தில் வைத்துப் பார்க்க முடியவில்லை. ஆனால் தன் மகன், சகோதரன், தாய் என தன் சொந்தங்களை இந்த வெடிகுண்டு விபத்தில் பறிகொடுத்து கதறிக் கொண்டிருப்பவர்களை நினைத்தால் பரிதாபம் தான் மிஞ்சுகிறது. இறந்தவர்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்,இருப்பவர்கள் நிம்மதியடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.
Posted by மா.கணேஷ் குமார் at 7:43 PM 0 comments
Friday, August 24, 2007
கலாம் மொழி
நான் கல்லூரியில் படிக்கும்போது கேட்டு கேட்டு புளித்துப்போன உறுதிமொழிகள்: மச்சி, இந்த நியூ இயர்லேருந்து தண்ணி,தம்ம விடப் போறேன்டா...அவள இனி பார்க்கவே போறதில்லடா.. இந்த செம்ல இருந்து ஆல் கிளியர் ஆகப் போறேன்...இனி வர சண்டே எல்லாம் வேஸ்ட் பண்ணாம ஒழுங்கா கேட்டுக்கு படிக்கப் போறேன்..
இவையெல்லாவற்றிலும் நான்,எனது - என்பவைதான் மேலோங்கியிருக்கும். ஆனால் இந்த வட்டங்களை தாண்டி சமுதாய நோக்கோடு எடுக்கப்படும் உறுதி மொழிகள் மிகச்சில. மாணவர்கள் கடை பிடிக்க திரு. அப்துல் கலாம் அவர்களின் இந்த உறுதிமொழிகளும் அத்தகையதே.
நல்ல லட்சியத்தை மேற்கொள்வேன். உழைத்து படித்து, லட்சியத்தை அடைய முயற்சிப்பேன். விடுமுறை நாளில் ஐந்து பேருக்கு, எழுத, படிக்க சொல்லித் தருவேன். வீடு, பள்ளி, கல்லுாரியில் குறைந்தது ஐந்து செடிகளை நட்டு, வளர்த்து பாதுகாத்து மரமாக்குவேன். மது, போதை பழக்கத்தால் துயரப்படும் ஐந்து பேரையாவது, மீட்க பாடுபடுவேன். துயரத்தோடு உள்ள ஐந்து பேருக்கு ஆறுதல் கூறி துயரத்தை நீக்க பாடுபடுவேன். ஜாதி, மத, மொழியின் பெயரில் எந்தவொரு பாகுபாடும் பாராட்டாது எல்லாரிடமும் சமமாக நடந்து கொள்வேன். வாழ்க்கையில் நேர்மையாக நடந்து கொண்டு மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக இருக்க முயற்சிப்பேன். என் தாய், தாய் நாட்டை நேசித்து, பெண்களுக்கு உரிய மரியாதையை கொடுப்பேன். [நன்றி:தினமலர்]
யோசித்து பார்க்கையில் இவை மாணவர்களுக்கு மட்டும் கூறப்படவில்லையெனப் புலப்படுகிறது.
Posted by மா.கணேஷ் குமார் at 11:01 PM 0 comments
Thursday, August 23, 2007
இவங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? - சொல்லுங்க விஸ்வநாதன் சார்
இன்றைய தேதிக்கு இந்தியாவிலேயே மிகக் கஷ்டமான வேலை எதுவென்றால் அது நிச்சயமாக மக்களவை சபாநாயகர் வேலைதான். நான் படித்த கும்பகோணம் நகர மேனிலைப்பள்ளியில் விஸ்வநாதன் என்றொரு தலைமை ஆசிரியர் இருந்தார். அவர் வந்து நின்றால் கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேர் படிக்கும் பள்ளியில் குண்டூசி விழும் ஓசை கூட கேட்கும். அந்த அளவுக்கு பள்ளியைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். அவர் கூட நம் மக்களவை உறுப்பினர்களிடம் கட்டாயம் தன் தோல்வியை ஒத்துக்கொண்டிருப்பார்.
பொறுமை மீறி கடைசியில் இன்று புலம்பித் தள்ளியிருக்கிறார் திரு.சோம்நாத் சாட்டர்ஜி."அடப் போங்கய்யா, இவங்களுக்கு சின்ன புள்ளைங்க தேவலாம். அதுங்க கூட கொஞ்சம் ஒழுங்கா நடந்துக்கும்".[பார்க்க:http://www.ibnlive.com/news/parties-shield-mps-veto-punishment-proposal/47353-3.html]
இன்னொரு விஷயத்தக் கேட்டா இன்னும் பகீர்ங்குது. ஒரு நிமிஷத்துக்கு மக்களவை நடக்க ஆகும் செலவு மட்டும் 22,089 ரூபாயாம்.
திருவாளர் MP அவர்களே உங்களிடம் இரண்டு கேள்விகள்:
1. நீங்கள் களேபரம் செய்யும் இந்த இடத்தில் தான் நேரு,லால் பகதூர் சாஸ்திரி போன்றவர்கள் ஆட்சி செய்தனர் என்பதை நினைவில் வைத்திருக்கிறீர்களா?
2. ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போது இன்னொருவரும் சேர்ந்து பேசினால் யாருக்கும் எதுவும் புரியாது என்று சின்னக் குழந்தைக்கு கூட தெரியும். அது ஏன் லட்சக்கணக்கில் ஓட்டு வாங்கிய உங்களுக்கு புரியவில்லை?
ஏன் சிரிக்கிறீர்கள்? புரிகிறது..அதை உங்களுக்கு ஓட்டு போட்டவர்களிடமே போய் கேட்க சொல்கிறீர்கள்...
Posted by மா.கணேஷ் குமார் at 9:35 PM 0 comments