Saturday, August 25, 2007

என்று தணியும் உங்கள் குருதி தாகம்?

கோயம்புத்தூர், மும்பை...இப்போது ஹைதராபாத். பயங்கரவாதத்தின் இரத்த தாகத்திற்கு நம் சகோதரர்கள் 41 பேரை இன்று இழந்திருக்கிறோம். வெறித்தனம்,வன்முறை,பயங்கரவாதம்,தீவிரவாதம்...இப்படி எந்த பெயர் வேண்டுமானால் இருக்கட்டும். என்னால் இதை சுத்தமான 'கோழைத்தனம்' என்றுதான் அழைக்க முடிகிறது. ஏ கோழைகளே! விடுமுறையை கொண்டாட லேசர் ஷோ பார்க்க வந்த சிறுமி,தன் இரவு உணவை சாப்பிட்டு கொண்டிருந்த இளைஞன் - இவர்கள் எப்படி உங்கள் லட்சியத்திற்கு
குறுக்கே வந்தார்கள்? இப்படி நீங்கள் அடைய விரும்புவது எதை?


இதற்கு மூலகாரணம் அந்நிய சக்திகளாகவே இருக்கட்டும். ஆனால் அவர்கள் கொடுக்கும் சில பல லட்சங்களுக்கு துணை போகும் நமக்குள் ஒளிந்திருக்கும் அந்த களைகள் தான் முதலில் களையப்பட வேண்டியவை.

இந்த வழக்குக்கு தீர்வு சொல்ல எப்படியும் இன்னும் 10,12 வருடங்கள் ஆகும். இதற்குள் குற்றவாளிகளுக்கு மதச்சாயம் பூசி அவர்கள் செயலை நியாயப்படுத்த சில அரசியல் கட்சிகள் இப்போதே தயாராகி கொண்டிருக்கும். ஆனால் இந்த வெடிகுண்டின் வெளிச்சத்தில் இருட்டாகி போன இந்த குடும்பங்களுக்கு என்ன தான் தீர்வு?

உதயம் தியேட்டர் அருகில் காசு குறைத்து கேட்டதற்காக எல்லார் முன்பும் என்னை அசிங்கமாக திட்டிய ஆட்டோக்காரனைக் கூட என்னால் சத்தியமாக இந்த சம்பவத்தில் வைத்துப் பார்க்க முடியவில்லை. ஆனால் தன் மகன், சகோதரன், தாய் என தன் சொந்தங்களை இந்த வெடிகுண்டு விபத்தில் பறிகொடுத்து கதறிக் கொண்டிருப்பவர்களை நினைத்தால் பரிதாபம் தான் மிஞ்சுகிறது. இறந்தவர்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்,இருப்பவர்கள் நிம்மதியடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.

No comments: