சமீபத்தில் மாடபூசி கிருஷ்ணஸ்வாமி கோவிந்தகுமார்(அட, நம்ம விகடன் 'மதன்' தாங்க) எழுதிய 'வந்தார்கள் வென்றார்கள்' புத்தகம் படித்தேன். படிக்க படிக்க, இந்திய வரலாறை
இவ்வளவு எளிதாகவும், பக்கத்துக்கு பக்கம் ஆர்வம் தூண்டும் வகையிலும் எழுத முடியுமா என்று ஆச்சரியப்பட்டேன். தைமூரில் ஆரம்பித்து கடைசி முகலாய அரசர் பகதூர் ஷா வரையிலும் நம்மை புத்தகம் கட்டி வைத்து விடுகிறது, இது மதன் அவர்களின் எழுத்துத் திறனுக்கு நல்ல சான்று.
கஜினி,குதுப்மினார்,கோஹினூர்,தாஜ்மஹால்,பாபர்,அக்பர் என்று நாம் கேள்விப்பட்ட பலவற்றைப் பற்றி நாம் கேள்விப்படாத பல விஷயங்களை நன்றாக விளக்கியிருக்கிறார். அவற்றுள் என்னைக்கவர்ந்த இரு விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்:
முதலாவது விஷயமும் ஒரு முதலாவதைப் பற்றியதே. தெளிவாகச் சொன்னால், டெல்லி அரியணையை அலங்கரித்த முதலாவது பெண் சுல்தான் ரஸியா பேகம்தான் அது. இவர் குதுப்மினார் கட்டி முடித்த 'இல்துமிஷ்'ன் மகள். அறிவு, வீரம், அரசியல் திறம், நிர்வாகத்திறமை என்று நாடாளும் மன்னனுக்கு உரிய சகலமும் பெற்றிருந்த இந்த பெண் புலிக்கு முதலில் நாடாளும் உரிமை மறுக்கப்பட்டது. ஏன் தெரியுமா? அது 'பெண்' புலி...அதுதான். இன்றும் பெண்களுக்கு முகத்திரை அணிவிக்கச் சொல்லும் பழக்கம் உள்ள ஒரு சமுதாயத்தில் பிறந்த ரஸியாவுக்கு அன்று எவ்வளவு எதிர்ப்பு கிளம்பியிருக்கும். அவர் டெல்லி அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்தது மொத்தம் மூன்றே ஆண்டுகள்தான். பின்னர் ஒரு போரின் போது சில இந்து வீரர்களால் கூடாரத்தில் வைத்து கொலை செய்யப்பட்டார்.
ரஸியாவைப் பற்றிய இந்த நல்ல விஷயங்களை சொன்னது போலவே அவரின் குறைகளையும் மதன் பாரபட்சமின்றி சொல்லியிருக்கிறார். உதாரணம், அடிமை யாகூப் மீது அரசி கொண்ட நட்பு.கி.பி.1236-ல் ஆட்சிக்கு வந்த ரஸியா பேகத்திற்கு பிறகு வேறு பெண் சுல்தான்களை காலம் அரியணைக்கு அனுமதிக்கவில்லை. எனவே அவரே கடைசி பெண் சுல்தானாகவும் அறியப்படுகிறார்.
தற்போது இரண்டாவது விஷயத்திற்கு செல்வோம். பள்ளிப்பாடங்களில் பாபர் மற்றும் அக்பருக்கு இடையில் 'ஷெர்ஷா' என்னும் ஆப்கானிய மன்னர் ஆண்டதாக அறிந்திருந்தேன். அவரைப் பற்றி மதன் கொடுக்கும் தகவல்கள் உண்மையிலேயே அந்த மன்னர் மீது சற்று மரியாதை ஏற்பத்துகிறது.
பாபர் - மொகலாய சாம்ராஜ்யம் நிறுவியவர்; அக்பர் - அதை இன்னும் பெரிதாக்கி, நல்ல நிர்வாகம் அளித்தவர். அந்த பாபரின் மகனும் மற்றும் அக்பரின் தந்தையுமான ஹீமாயூனை
தோற்கடித்து ஐந்து ஆண்டுகள் ஆட்சி நடத்தியவரே இந்த 'ஷெர்ஷா'. இவர் ஆரம்பித்து வைத்த பல நல்ல விஷயங்களை தொடர்ந்ததால்தான் அக்பரின் ஆட்சி முறை சிறந்து விளங்கியது.
1. மத்திய அரசு, மாநில கவர்னர்கள், பெரிய அதிகாரி வர்க்கம் - போன்றவற்றை ஆரம்பித்தவர் ஷெர்ஷாதான்.(இவை அக்பர் அல்லது ஆங்கிலேயரின் கண்டுபிடிப்பு என்று இதுநாள் வரை நான் நம்பியிருந்தேன்).
2. இவரது சாம்ராஜ்யம் 'சர்க்கார்கள்' மற்றும் 'மாவட்டங்கள்' என்று பல பிரிவுகளை உள்ளடக்கியதாக இருந்தது. அதிகாரிகளின் மெத்தனப் போக்கை குறைக்க அடிக்கடி அவர்களை இட மாற்றங்கள் செய்தார்.
3. நிலச் சீர்திருத்தங்கள் கொண்டு வந்தார். விளைச்சல் இல்லாக் காலங்களில் விவசாயக் கடன்களைத்(ப.சி-யின் முன்னோடியோ!!!) தள்ளுபடி செய்தார்.
4. ஒவ்வொரு மாவட்டத்திலும் போலீஸ் படை ஏற்படுத்தப்பட்டது. தண்டனைகள மிகக் கடுமையாக்கப்பட்டன.
5. முக்கியமாக 'இந்து - முஸ்லிம்' பார பட்சம் பாராமல் பதவி உயர்வு வழங்கப்பட்டது.
அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று ஆட்சிக்கு வந்து இன்று ஒன்றும் செய்யாமல் 'கஜானாவை' மட்டும் காலியாக்கும் சில அரசியல்வாதிகளை பார்க்கையில் 'ஷெர்ஷா'-வை படித்து நாம் பெருமூச்சே விட முடிகிறது.
இவ்வாறு இன்னும் பல சுவையான விஷயங்களை கொஞ்சமும் சுவை குன்றாமல் சொன்னதற்காக 'மதன்' அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள். இன்னொரு ஆச்சரியம், இந்த புத்தகத்திற்கு ஓவியம் வரைந்தது மதன் என்றால் நீங்கள் ஏமாந்துதான் போவீர்கள், காரணம் ஓவியம் வரைந்தது 'அரஸ்'. மிக நன்றாக வந்திருக்கிறது.
வாய்ப்பு கிடைத்தால் படித்து பாருங்கள்..விலை : 110 ரூபாய்கள், விகடன் பிரசுரம்.
பிரிவதற்கு முன் இரு பொது அறிவு கேள்விகள்(தூர்தர்ஷன் அறிவோம் அறிவை நிகழ்ச்சியில் கேட்கப்பட்டவை) :
1. பிறகோள்களில் இருக்கும் உயிரினம் பற்றி படிக்கும் துறையின் பெயர் என்ன?
2. DEIMOS, PHOBOS - அப்படி என்றால் என்ன? விடை தெரிந்தவர்கள் பின்னூட்டம் இடுங்கள். அவை பற்றி மேலும் உங்களுக்குத் தெரிந்த கருத்துக்களையும் பகீர்ந்தீர்களாயின் அடியேன்
அறியாமை போக்கிக் கொள்வேன்.
மீண்டும் சந்திப்போம்...
Sunday, July 6, 2008
இந்திய வரலாறு, மிக எளிமையாய்...
Posted by மா.கணேஷ் குமார் at 9:12 AM 3 comments
Subscribe to:
Posts (Atom)