Monday, December 3, 2007

நீங்கள் பழைய ஜோவா? புதிய ஜோவா?



போன வாரம் அசத்தலா ஆரம்பிச்சு படு மொக்கையா முடிஞ்சு போன "அவல் கேசரி"-யப் பார்த்தோம். இந்த வாரம் 'மொக்கை'-யா ஆரம்பிச்சு ரொம்ப நல்லா முடிஞ்ச ஒரு மேட்டரை எழுதப் போறேன்.

"நன்றி பகரும் நன்னாள்"(thanks giving day) - என்று சொல்லி நாலு நாள் லீவு விட்டாங்க. பெசன்ட் நகர் பீச், உதயம் தியேட்டர், தி-நகர் கூட்டம், எனக்கு சென்னையை சுத்தி சுத்தி காட்டின 5E,D70 இது எதுவுமே இல்லாம நாலு நாள் "டைம் பாஸ்" பண்ணுடான்னா நான் என்ன பண்ணுவேன், சொல்லுங்க? ஏற்கனவே "சிக்ஸ் பிளாக்ஸ்"-ல கிடைச்ச ஒரு நல்ல அனுபவமே போதும். வெளியில போலான்னு எவன்கிட்டயும் பேச்சே எடுக்கல. இங்க இருக்கிற ஒன்னு, ரெண்டு தெரிஞ்ச தெரியாத நபர்களுக்கெல்லாம் போன், சாட் - என்று முடிந்த வழிகளில் எல்லாம் மொக்க போட்டு முதல் நாளை தீர்த்தேன். இதுக்கு மேல பேசுனா நட்பு முறிஞ்சுடும். சரி, பொழச்சி போங்கடான்னு டி.வி-யை போட்டேன்.

ஏதோ படுமொக்கையாய் ஒரு படம் ஓடிக் கொண்டிருந்தது. "Joe Somebody"-என்ற அந்தப் படத்தை முற்றிலும் விருப்பமே இல்லாமல் நான் போட்ட காபியை நானே குடிப்பது போல் பார்க்க ஆரம்பித்தேன். படம் ஒண்ணும் சொல்லிக்குற மாதிரி "டாப்" கியரில போற படம் எல்லாம் கிடையாதுங்க. ரொம்ப சாதாரண படம்தான்.

ஜோ - ஒரு அலுவலகத்தில் பல வருடங்களாய் வேலை பார்க்கும் ஒரு சாதாரண ஆசாமி. அலுவலத்தில் பதவி உயர்வு இல்லை; வீட்டில் நிம்மதி இல்லை(டைவர்ஸ் கேஸ்)...வாழ்க்கையை ஒரு வழியா ஓட்டிட்டு இருக்குற ஒரு சாதாரண ஜீவன். ஒரு நாள் அலுவலகத்தில் நடக்கும் ஒரு விழாவை ஒட்டி பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் தன் மகளை அழைத்து செல்கிறார். "parking lot"-ல் ஒரு சின்ன பிரச்சினை ஆகி விடுகிறது. தன்னையொத்த பத்து வருடங்களுக்கு மேல் வேலை செய்யும் தொழிலாளருக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில், ஜோவுக்கு இடம் கொடுக்காமல் வேறு ஒரு ஆள் குறுக்கே வந்து தன் காரை நிறுத்துகிறார்.

காரிலிருந்து இறங்கி அந்த நபரை பார்த்து "நீ செய்தது தவறு, வண்டியை நகர்த்து" என்கிறார். ஆனால் அந்த ஆள் "மல மாடு" மாதிரி ஆஜானுபாகா இருக்கிறான். நம்மாள் அவன் முன்னாடி சுண்டெலி மாதிரி நிக்கிறார். டேய், ஒழுங்கா வாய மூடிட்டு போன்னு சொல்லிட்டு அவரை அடித்து விடுகிறான். கன்னத்தை துடைத்து கொண்டு சுற்றும் முற்றும் பார்க்கிறார். அலுவலகத்தில் வேலை செய்யும் சக தொழிலாளர்கள் அவரைப் பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள்( நம்ம ஊர் மாதிரியே). இவை எல்லாவற்றையும் விட தன் சிறு வயது மகள் முன் ஏற்பட்ட அவமானம் வேறு. காரை அமைதியாக வேறு இடத்தில் கொண்டு போய் நிறுத்துகிறார்.

ஒரு வாரம் கழித்து அவர் செய்யும் அந்த அசாதாரணமான காரியம் எல்லோரையும் வியக்க வைக்கிறது. தன்னை அடித்த அந்த ஆளுக்கு போன் போட்டு இன்னும் ரெண்டு வாரத்துல அதே இடத்துல சண்டை போடலாம் வான்னு சவால் விடறார். சும்மா பேச்சுக்கு சொல்றார்னு பார்த்தா, அண்ணன் சீரியஸாவே களத்தில் இறங்கி விடுகிறார். தற்காப்புக்கலை சொல்லித்தரும் ஒரு நபரை அணுகி பயிற்சி எடுக்கிறார். முதலில் அவர் கொடுக்கும் அடிகளை விட வாங்கும் அடிகள் தான் அதிகம். கொஞ்சம் கொஞ்சமாய் கற்றுக்கொள்ள ஆரம்பித்து பின் கலக்குகிறார், அவருக்குள் தூங்கிக் கொண்டிருந்த 'விஜய்', 'அஜீத்' , 'விக்ரம்' மாதிரி கதாநாயகன் ஒரு நாற்காலியை போட்டு நச்சுன்னு எழுந்து உட்கார ஆரம்பிக்கிறார். இதற்கிடையில் அலுவலகத்தில் அவர் புகழ் பரவுகிறது. எல்லோரும் அவரை ஒரு "ஹீரோ" மாதிரி உசுப்பேத்துகிறார்கள். நிர்வாகம் அவருக்கு பதவி உயர்வு தருகிறது. ஆனால் ஜோவுடைய மகளுக்கு இவையெல்லாம் பிடிக்கவில்லை. அவர் பழைய ஜோவாக மாற வேண்டும் என்கிறாள். ஆனால் ஜோ விடாப்பிடியாக சண்டைக்கு ரெடியாகி விடுகிறார்.

இறுதியாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அந்த நாளும் வருகிறது. இருவரும் பழைய இடத்தில் மோதிக்கொள்ள தயாராகிறார்கள். சுற்றிலும் அலுவலக நண்பர்கள் நின்று ஜோவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார்கள். ஜோவுக்கு சண்டை கற்றுக் கொடுத்த நபரும் அந்த கூட்டத்தில் நிற்கிறார். அவருக்கு ஜோவின் மீது மிகுந்த நம்பிக்கையிருந்தது. அவர் கண்டிப்பாக ஜெயித்து விடுவார். ஏனெனில் அந்த அளவுக்கு பயிற்சி எடுத்திருந்தார். அந்த ஆஜானுபாகான ஆள் கண்களில் பயம் தெரிகிறது. கைகளில் நடுக்கம். ஆனாலும் விட்டு கொடுக்காமல் "வா! மோதலாம்" என்கிறார். ஜோ ஒரு நிமிடம் அவனை உற்று நோக்குகிறார்; அவன் கண்களில் பயத்தை படிக்கிறார். கண்டிப்பாக இந்த போட்டியில் வென்று விடுவோம் என்று அவருக்கு தெரிகிறது. சட்டென்று முடிவுக்கு வருகிறார். "நாம் மோதப் போவதில்லை" என்று கூறிவிட்டு திரும்பி நடக்கிறார். மொத்த கூட்டமும் ஏமாற்றத்தில் அவரைத்திட்டி முணுமுணுக்கிறது. அந்த ஆள் அமைதியாக வந்து அவரிடம் நடந்த விஷயத்திற்கு மன்னிப்பு கெட்கிறான். அவனை பார்த்து புன்னகைத்து விட்டு தன் மகளை வந்து கட்டிக்கொள்கிறார் "பழைய" ஜோவாய். தற்காப்புக்கலை ஆசிரியர் ஜோ-வைப் பாராட்டி தற்காப்புக்கலையின் முக்கிய பாடத்தை ஜோ இன்று கற்றுக் கொண்டார் என்று சொல்லிவிட்டு செல்கிறார். அப்புறம் என்ன...நன்றி, வணக்கம் தான்.

படத்தின் இறுதிக்காட்சியை உற்று நோக்கினால் நமக்கு அகிம்சையின் அர்த்தம் புலப்படும். நாமும் பல இடங்களில் "ஜோ"வாய் தான் இருக்கிறோம். ஆனால் பழைய ஜோவாய். நாம் வலிமை குறைந்தவர்களாய் இருக்கும் இடத்தில் எதோ பெரிய தியாகி போல் விட்டுக் கொடுப்பதாய் காட்டிக் கொள்கிறோம். ஆனால் நம்மை விட வலிமை குறைந்தவர்களை பார்க்கையில் நமக்குள் இருக்கும் அந்த ஆஜானுபாகான ஆள் விழித்து கொள்கிறான்.

ஜோவுக்கு அந்த நபரிடமிருந்து தேவைப்பட்டதெல்லாம் அவனுடைய நியாயமற்ற செயலுக்கு அவன் மன்னிப்பு கேட்பதுதான். அதை அவர் இறுதியில் சண்டையை கை விட்டதனால் மிக எளிதாக அடைய முடிந்தது.

காந்தி சொன்ன அந்த அருமையான வாழ்க்கைப் பாடத்தை யாரோ எனக்கு திரும்பவும் சொன்னதுபோல் இருந்த்தது. முடிந்தால் படத்தை ஒரு முறை பாருங்கள். படத்தை பார்த்து விட்டு கதை வேறு மாதிரி இருந்தால், என் ஆங்கில ஆசிரியரின் முகவரியைத் தருகிறேன். போய் அவரை திட்டிக் கொள்ளுங்கள்.

ஆகவே, குழந்தைகளே! இன்னைக்கு என்னோட கருத்து இதான்,

செல்லிடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்.

No comments: