"பறவையைக் கண்டான் விமானம் படைத்தான், பாயும் மீன்களில் படகினைக்கண்டான்...எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்" - பாவ மன்னிப்பு படத்தில் இடம் பெற்ற அருமையான பாடல். கேள்வி அதுவல்ல. எதனைக் கண்டான் சிற்பக்கலை வடித்தான்? மாமல்லபுரத்தில் ஒரு நாள் சுண்டலை மென்றுகொண்டிருந்த அந்த கணத்தில் உதித்த கேள்வி இது. க.க-வைப் பற்றித்தான் உங்களுக்கு தெரியுமே, கேள்வின்னு ஒன்னு வந்துட்டா பதில் கண்டு பிடிக்காமல் விட மாட்டான். இந்த கேள்விக்கும் பதில் கண்டுபிடிச்சுட்டேன், எப்படின்னு கேக்கறீங்களா....வழக்கம் போல் இந்த வாரமும் ஒரு 'யுரேகா' தான்.
ஞாயிற்றுக்கிழமை சாயந்திரம் வந்து விட்டால் காபியுடன் காரம், இனிப்பு சாப்பிடாவிட்டால் க.க-வுக்கு கோபம் தலைக்கேறிவிடும். எப்போதும் எனக்கு இந்த கோபம் வராமல் பார்த்துக் கொள்ளும் நண்பன் இந்த முறை சமையலறைக்கு வழி காட்டி விட்டு கணினியை கட்டிக் கொண்டு அழ சென்றான். சரி, இன்னைக்கு ஒரு வழி பண்ணி நமக்குள் ஒளிந்திருக்கும் 'நளனை' வெளியில் காட்டி விட வேண்டியதுதான். என்ன பண்ணலாம்????? ஆங், 'அவல் கேசரி'...அருமையான தேர்வு. ஒரு கல்யாண பந்தியில் இரண்டாம் முறை கேட்டும் முடியாது என்று சர்வரால் மறுக்கப்பட்டு அவமானத்தை தேடித்தந்த பதார்த்தம்.
சில பல தளங்களில் வெளியிடப்பட்ட 'அவல் கேசரி' செய்முறைகளை கலந்து ஒரு புதிய செய்முறையை எழுதிக்கொண்டு சமையலறையை நோக்கி பீடுநடை போட்டேன்.
செய்முறை:
1. ஒரு கப் அவலை சிறிது நெய்யில் வறுக்கவும்.
2. ஒன்னரை கப் பாலை கொதிக்கவிடவும்.
3. கேசரி பவுடரையும், அவலையும் பாலில் கொட்டி வேகவிடவும்.
4. ஒரு கப் சர்க்கரையும் நெய்யும் கலந்து கிளறவும்.
5. சுவையான அவல் கேசரி தயார்.
ஆனால் இதில் இல்லாத ஒரு ஸ்டெப்ப நானா ஆட் பண்ணது தப்பாப்போச்சுங்க.
மூனாவது ஸ்டெப் வரை 'ஸ்மூத்'தா ப்ராஜெக்ட் போய்க்கிட்டு இருந்துச்சு. சரி, அதுபாட்டுக்கும் வெந்துட்டு இருக்கட்டும் என்று தொ.கா- வை ஆன் செய்தேன். அட..நம்ம 'மும்ஸ்'..குஷி படத்துல என்னமா பெர்மான்ஸ் காட்டிட்டு இருக்காங்க. கொஞ்ச நேரம் அதில் மூழ்கி விட்டேன்(ஹி..ஹி..இதான் அந்த எக்ஸ்ட்ரா ஸ்டெப்)...லைட்டா ஏதோ கருகிய வாசம் நாசியைத் தொலைக்க 'ச்ச..இவனுங்களுக்கு வேற வேலையே இல்ல...அடுப்புல எதாவது வைக்க வேண்டியது..அப்புறம் எங்கயாவது வாயப்பொலந்துகிட்டு நிக்கிறது...இந்த க.க. மட்டும் இல்லண்ணா இந்த ரூமே அலங்கோலம் ஆகிடும்' என்று சிலாகித்து கொண்டு அடுப்பில் பார்த்தால் நம்ம 'அவல் கேசரி' வாங்க சார் எங்க இந்த பக்கம்? என்று கேட்டது. சொன்னால் நம்ப மாட்டீர்கள், 'அவல் கேசரி' திரவ நிலையிலிருந்து திட நிலையை எட்ட எடுத்துக் கொண்ட நேரம் சரியாக ஐந்து நிமிடங்கள்.
ஒரு வழியாய் சட்டியில் இருந்து பெயர்த்து தட்டில் கொட்டி விட்டேன். அதற்கு பிறகு ஆறியவுடன் தட்டில் இருந்து அதை எடுக்க நான் செய்த முயற்சியின் அத்தாட்சி-தான் இந்த புகைப்படம்( நன்றி : நாராயணன்...எங்கள் அறையின் ஆஸ்தான போ.கி)
ஆகவே குழந்தைகளே 'அவல் கேசரி செய்தான்..சிற்பக்கலை படைத்தான்'...எனக்கு மும்ஸ் மாதிரி அவனுக்கு யாரு உதவி செஞ்சாங்கன்னு தெரியல.
Sunday, November 18, 2007
சமையலறையில் ஒரு மாமல்லபுரம்
Posted by மா.கணேஷ் குமார் at 6:17 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment