
இது கருத்து கணேசன் பள்ளிப் பருவத்து நிகழ்ச்சி. எங்கள் வரலாற்று ஆசிரியர் பல்வேறு தலைவர்களைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்தார். மதியம் சாப்பிட்ட தயிர் சாதம் வேலையைக் காட்ட தலைவர்களின் புண்ணியத்தில் தாலாட்டு கேட்டுக் கொண்டிருந்தோம். சந்திர குப்த மௌரிய காலத்தில் ஆரம்பித்து பசுமைப்புரட்சி சி.எஸ் வரைக்கும் வந்திருந்தார். திடீரென்று என்ன நினைத்தாரோ தெரியவில்லை, பாடத்தை நிறுத்தி விட்டு எங்களிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்.
"எல்லோரும் உலகத்தைப் பார்த்து அதன் வழியில் ஓடிக்கொண்டிருக்க இவர்கள்தான் உலகை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்கள், அதனால்தான் அவர்களை தலைவர்களாக கொண்டாடுகிறோம். அப்படிப்பட்ட ஒரு செயலை உங்களை செய்ய சொன்னால், நீங்கள் என்ன செய்வீர்கள்?"
அறிவியலில் ஆரம்பித்து சட்டம் ஒழுங்கு கட்டிக்காப்பது வரை ஆளாளுக்கு ஒரு பதிலை சொல்லிக் கொண்டிருந்தனர். எந்த பதிலிலும் வரலாற்று ஆசிரியர்க்கு திருப்தி இல்லை.
"ம்ம்ம்..இன்னும் கொஞ்சம் ட்ரை பண்ணுங்க..உங்க கிட்ட இருந்து இன்னும் எதிர்பார்க்கிறேன்" - என்பது போல பார்த்தார்.
"டேய் சோவை (ஹி,ஹி வ.ஆ நமக்கு ஆசையா வச்ச செல்லப் பேரு) நீ எல்லாரும் திரும்பி பார்க்கிற மாதிரி என்ன பண்ணுவ?"
ஆழ்ந்த யோசனையோடு எழுந்தேன்...'ம்..ம்' தொண்டையை செருமியதும் 'புகழேந்தி கேள்விக்கு அரங்கனார் சொல்லப்போற பதில்' மாதிரி மொத்த வகுப்பும் அமைதியானது.
"சார், பெயர் மாற்றம் செய்வேன் சார்"
வரலாற்று ஆசிரியரின் முகத்தில் டன் கணக்கில் ஆச்சரியம். அடடா, ரொம்ப புதுசா பையன் ஏதோ சட்டம் கொண்டு வரப்போகிறான் என்பது போல பார்த்துக் கொண்டே,
"புரியலப்பா..கொஞ்சம் விளக்கமா சொல்லு" என்றார்.
"நம்ம ப்யூன் மாணிக்கம், நீங்க, நம்ம ஹெட்மாஸ்டர் ஏன் நம்ம முதலமைச்சர், பிரதம மந்திரி உட்பட எல்லார் பேரையும் ஜேம்ஸ்னு மாத்தி வைக்கணும்னு ஒரு சட்டம் கொண்டு வருவேன் சார்"
"கொண்டு வந்து"
"நம்ம மணிக்கூண்டு மேல ஏறி நின்னுட்டு நல்லா சத்தமா "ஜேம்ஸ்"-னு கூப்பிடுவேன் சார். அப்ப கட்டாயம் இந்த உலகமே திரும்பி என்னை பார்க்கும்"
ஏதோ அன்பாக சொல்லி என்னை திட்டினார். அது நமக்கு இங்கே தேவையில்லாதது. எனக்கு தெரிந்து அதன் பிறகு அவர் வகுப்பில் கேள்விகள் கேட்கப்பட்டதாய் நினைவில்லை.
ஆகவே, குழந்தைகளே இனிமே உலகத்தை திருப்புறதுக்கு ஸ்க்ரூ ட்ரைவர் தேடுற வேலைய விட்டுட்டு ஒழுங்கா படிச்சு முன்னேறுங்க.
Friday, January 11, 2008
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே, நண்பனே!!!
Posted by மா.கணேஷ் குமார் at 7:39 PM 0 comments
Sunday, January 6, 2008
குணசேகரன் கோழையல்ல - சிறுகதை

மனதிற்குள் பெரிய சவாலுடனும், மடி நிறைய பயத்துடனும் சொந்த ஊரில் வந்திறங்கினான் குணசேகரன். இறக்கி விட்ட பேருந்தை புகையினூடே மறைவதைப் பார்த்துக் கோண்டே அடுத்த பேருந்தை பிடித்து வந்த வழியே போய் விடலாமா என்று யோசித்தான். பிறகு "கோழை குணசேகரன்" என்று சிறுவயது முதல் பரிகாசம் செய்யும் நண்பர்களின் கேலிப்பேச்சு உண்மையாகவே போய்விடும். "அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா" - சரேலென திரும்பினான். "ச்ச, ஒரு டீக்கடையில் பாடிக் கொண்டிருக்கும் ரேடியோ அட்வைஸ் சொல்லுமளவுக்கு நம்ம நிலைமை ஆகிப்போச்சே... ம்ம்..பார்ப்போம் என்னதான் ஆகுதுன்னு" - முடிவு செய்து கொண்டு வீட்டை நோக்கி நடை போட்டான்.
கொஞ்ச நேரம் தூங்கி விட்டு விழித்தபோது, சூடான காபியும், அன்றைய தினசரி ஒன்றும் அவனது தலையணை அருகே அலங்கரித்துக் கொண்டிருந்தன. முன்னது தாயின் பாசம், பின்னது தந்தையின் கவனிப்பு. காபியை சுவைத்து கொண்டே தினசரியில் கண்களை மேய விட்டுக் கொண்டிருந்தான் குணசேகரன்.
"இமாசல பிரதேசத்தில் முதல் கட்ட தேர்தலில் எட்டாம் முறையாக கள்ள ஓட்டு போட முயன்றவன் கைது" - செய்தியை பார்த்தவுடன் சட்டென புரை ஏறியது. தலையைத் தட்டிக் கொண்டே தினசரியை கீழே வைத்தான்.
"டேய் மாப்ள, என்ன நல்ல தூக்கமா? உங்க அம்மா சொன்னாங்க காலைலதான் வந்தீயாமே? வழியில ஏதும் பிரச்சினையா?" - இந்த வசனம் உதிர்த்த உதடுகளுக்கு சொந்தக்காரன் ஆறுமுகம், குணசேகரனின் நண்பன். அவனிடம் மட்டும்தான் குணசேகரன் "அந்த" விஷயத்தைப் பற்றி பேசியிருந்தான். வேறு யாருக்கும் தெரியாது, தெரிந்து விடவும் கூடாது.
"குணா, இன்னொரு மேட்டர் தெரியுமா? புதுசா வந்திருக்கிற எஸ்.பி பயங்கர ஸ்டிரிக்டாம். எலக்ஷன் பூத்ல வச்சு என்ன பிரச்சினை பண்ணாலும் எதையும் விசாரிக்காமலே அரஸ்ட் பண்ண சொல்லிட்டாராம். போன தடவை நாலு முறை கள்ள ஓட்டு போட்ட நம்ம முத்துவேலன் இந்த தடவை பூத் பக்கமே போக மாட்டேன்னு சொல்லிட்டு இருக்கான். பாத்துக்கப்பு, நீயெல்லாம் எம்மாத்திரம். நல்லா யோசிச்சுதான் இந்த தடவை வந்திருக்கியா? இப்ப கிடைக்கிற மரியாதை அப்புறம் கிடைக்காதுப்பா. பாத்து நடந்துக்க" சொல்லிவிட்டு அம்மா கொடுத்த காபியை குடித்துக் கொண்டே குணசேகரன் மனதிற்குள் நாலைந்து பயக்கன்றுகளை நட்டு வைத்து நீர் ஊற்றினான்.
ஆறுமுகம் போன சிறிது நேரத்திற்கெல்லாம் எழுந்து உட்கார்ந்து ஆழமாக யோசிக்க ஆரம்பித்தான் குணா. ஆறுமுகம் சொன்னதைபோல அவனுக்கு "மரியாதை" கிடைத்துக் கொண்டுதான் இருந்தது. அதற்கு காரணமும் இருந்தது.
சந்தானம், மெய்யப்பன் - இவர்கள் இருவர்தான் அந்த ஊரின் முக்கிய அரசியல் புள்ளிகள். தேர்தல் களத்தில் முதல் இரண்டு இடங்களை இவர்கள் இருவர்தான் எப்போதும் அலங்கரித்தார்கள். வேறு வேறு கட்சி மற்றும் ஜாதியை சேர்ந்தவர்கள். இந்த முறை மெய்யப்பன் தோல்வி என்றால், கொஞ்சம் கூட யோசிக்காமல் சொல்லிவிடலாம் வெற்றி சந்தானத்தின் பக்கம் என்று.
குணசேகரனின் பெரிய அண்ணன் சந்தானத்தின் கட்சியை சேர்ந்தவன். அடுத்த அண்ணன் மெய்யப்பன் பக்கம். தேர்தல் சமயங்களில் இருவருக்குள்ளும் பேச்சு வார்த்தை சுத்தமாக இருக்காது. இது ஒரு வகையில் குணசேகரனுக்கு சாதகமாக இருந்தது. அவன் ஓட்டுப்போட்டு விட்டு வரும்போது சந்தானத்தின் ஆட்களைப் பார்த்தால் உங்களுக்குத்தான் ஓட்டு போட்டேன் என்று சொல்லிவிடுவான். மெய்யப்பன் ஆட்களிடம் அவனுக்குத்தான் ஓட்டுப்போட்டேன் என்று மையைக்காட்டி நழுவி விடுவான். இதனால் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டிலும் நண்பர்களை சேர்த்திருந்தான். இதைத்தான் அறுமுகம் "மரியாதை" என்று குறிப்பிட்டான். போர்வையுடன், புதுசா வந்திருக்கிற எஸ்.பி பற்றிய பயத்தையும் உதறி விட்டு எழுந்தான் குணா.
"குணா, போய்ட்டு சீக்கிரம் வரப்பாரு. பசங்ககிட்ட பேச்சு கொடுத்திட்டு நிக்காத. நம்ம பரஞ்சோதி மவன் கள்ள ஓட்டு போட்டான்னு சொல்லி போலிசு புடிச்சுட்டு போச்சாம். பயலுக அந்த டீக்கடை பக்கம் நின்னு பெரியவன் கிட்ட சொல்லிட்டு இருந்தானுவ. நீ சிவனேன்னு ஓட்டு போட்டுட்டு வர வழிய பாரு" - இவ்வாறு சொல்லிக்கொண்டே நம்ம கதைக்குள் எண்ட்ரி கொடுத்தார் குணா அப்பா.
"சரிப்பா" என்று தலையாட்டினான்.
மதியம் 2 மணி இருக்கும். பசங்க எல்லாம் சாப்பிட போயிருப்பாங்க. இப்ப போனாத்தான் சரியாய் இருக்கும். யார்கிட்டயும் பேச்சு குடுக்க வேண்டி இருக்காது. யோசித்தவாறே சட்டையை மாட்டிக் கொண்டு எலக்ஷன் பூத்துக்கு நடையைக் கட்டினான்.
அப்பாடா, ரெண்டுபேருதான் நிக்கிறாங்க. குணாவுக்கு இப்பொழுதுதான் கொஞ்சம் தைரியம் எட்டிப் பார்க்க ஆரம்பித்தது. உள்ளே வோட்டர்ஸ் லிஸ்ட் சரி பார்க்கும் பணியில் தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என்று பார்த்து யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டான்.
"அடுத்தது யாருப்பா". மனசு படபடவென அடித்து கொண்டது. உள்ளங்கை வேர்த்ததை குணாவால் உணர முடிந்தது. உள்ளே மெல்ல சென்றான். குணா கொடுத்த சீட்டை வாங்கிக் கொண்டு "அடையாள அட்டை இருக்கா?" என்று கேட்கப்பட்டது.
"இதோ இருக்கு சார்" வாங்கி சரி பார்த்தார். குணசேகரன் படபடப்பின் உச்சத்தில் இருந்தான்.
"சரியாய் இருக்கு. அங்க போ" - என்று அடுத்த ஆளிடம் கை காண்பித்தார். அவரும் ஏதோ லிஸ்டில் டிக் செய்து கொண்டு, அங்க மிஷின் இருக்கு என்று கைகாண்பித்தார்.
மணி 2:20 -ஐத் தொடப்பார்த்தது. குணாவின் கையில் மை வைக்கப்பட்டு கொண்டிருந்தது. மை வைத்தவன் அவனை ஒரு மாதிரி பார்த்தது, குணாவுக்கு என்னவோ போலிருந்தது. "இவன் ஒரு வேளை எல்லாரிடமும் சொல்லிவிடுவானோ" என்று பதைபதைத்தான். பூத்தில் இருந்தவரும் அவனை வித்தியாசமாக பார்த்துக்கொண்டே அடுத்த ஆளை உள்ளே கூப்பிட்டார்.
"என்ன மச்சான் இப்படி வேர்த்து போய் வர்ற. உள்ள ஏதும் இன்டர்வியூ நடத்துனாங்களா?" - பூத்துக்கு வெளியே தங்கவேலு குணாவை பார்த்து விட்டு சிரித்துக்கொண்டே கேட்டான்.
"அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா..உள்ள ஃபேன் ஓடல" - சொல்லியவாறே நழுவினான்.
யாரிடமும் பேசாமல் வீட்டுக்குள் வந்து சட்டையை கழற்றிவிட்டு நாற்காலியில் அமர்ந்த போதுதான் குணாவுக்கு மூச்சே வந்தது.
பின்ன, என்ன சார்? சந்தானம், மெய்யப்பன் ரெண்டு பேருமே பெருச்சாளிங்கதான். இதுல எவனுமே வேணான்னு ஊர் பேர் தெரியாத ஒரு சுயேச்சைக்கு வாக்களித்து தன் வாக்கை வீணாக்க விரும்பவில்லை குணா. அதான், இந்த முறை துணிந்து தனக்கு யாரையும் பிடிக்கவில்லை என்று "நாற்பத்தி ஒன்பது ஓ" தேர்தல் சட்ட விதியின்படி 17-A ஃபார்ம் வாங்கி பூர்த்தி செய்திருந்தான். சந்தானத்தை விட்டா மெய்யப்பன், மெய்யப்பனை விட்டா சந்தானம் என்று மாற்றி மாற்றி தேர்ந்தெடுத்து ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி விட்டு தைரியமாய் எல்லோரும் வெளியில் நடமாடிக் கொண்டிருக்க பயந்தவாறே நாற்காலிக்குள் பதுங்கியிருக்கும் இந்த குணசேகரன் கோழையா? நீங்களே சொல்லுங்கள்....
எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியவே இல்லைங்க. நாம ஒரு இடத்துல பொண்ணோ, மாப்ளயோ பார்க்க போறோம், நமக்கு பிடிக்கலைன்னு வைங்க. உடனே எல்லார் முன்னிலையிலும் பிடிக்கலைன்னு சொல்ல முடியுமா? போய் லெட்டர் போடுறோம் என்று சொல்லி விட்டு அல்லவா வருகிறோம். அப்படியிருக்க, நம்ம அரசியல் சட்டம் மட்டும் எப்படி எனக்கு எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லை, 17-A ஃபார்ம் கொடுங்கன்னு தைரியமா பூத்ல எல்லார் முன்னாடியும் ஒரு குடிமகன் சொல்வாருன்னு எதிர்பார்க்கலாம்?
தேர்தலில் போட்டியிட கல்வி அவசியம் இல்லை, அப்படி வைச்சா ஒரு காமராஜர் மாதிரி தலைவரை இழந்து விடுவோம் அல்லவா? சரி நியாயமான வாதம்தான். ஆனால் ஓட்டுபோடுபவன் மட்டும் 17-A வாங்கி பூர்த்தி செய்து கொடுக்கும் அளவுக்காவது படித்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம். பல்பு, கிரிகெட் மட்டை, கத்தரிக்கோல் சின்னங்கள் மாதிரி "யாரும் பிடிக்கவில்லை" என்று ஒரு சாய்ஸ் கொடுத்தால் என்னவாகப் போகிறது? அதை விட்டு ஃபார்ம் வாங்கி, அதில் எனக்கு யாரையும் பிடிக்கவில்லையென்றும், அதற்கான காரணத்தையும் விலாவரியாக மழைக்குக்கூட பள்ளிக்கு ஒதுங்காத Mr.குடிமகன் எழுதிக் கொடுப்பார் என்று எதிர்பார்ப்பது எந்த வகையில் புத்திசாலித்தனம் என எனக்கு புரியவில்லை.
என்ன குழந்தைகளே, இன்னும் இந்த நாற்பத்தி ஒன்பது ஓ பற்றி எதுவும் தெரியலன்னா கீழே இருக்குற இணையதள முகவரிக்கு செல்லுங்கள்.
http://en.wikipedia.org/wiki/49-O
Posted by மா.கணேஷ் குமார் at 3:09 PM 0 comments