Friday, January 11, 2008

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே, நண்பனே!!!


இது கருத்து கணேசன் பள்ளிப் பருவத்து நிகழ்ச்சி. எங்கள் வரலாற்று ஆசிரியர் பல்வேறு தலைவர்களைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்தார். மதியம் சாப்பிட்ட தயிர் சாதம் வேலையைக் காட்ட தலைவர்களின் புண்ணியத்தில் தாலாட்டு கேட்டுக் கொண்டிருந்தோம். சந்திர குப்த மௌரிய காலத்தில் ஆரம்பித்து பசுமைப்புரட்சி சி.எஸ் வரைக்கும் வந்திருந்தார். திடீரென்று என்ன நினைத்தாரோ தெரியவில்லை, பாடத்தை நிறுத்தி விட்டு எங்களிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்.

"எல்லோரும் உலகத்தைப் பார்த்து அதன் வழியில் ஓடிக்கொண்டிருக்க இவர்கள்தான் உலகை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்கள், அதனால்தான் அவர்களை தலைவர்களாக கொண்டாடுகிறோம். அப்படிப்பட்ட ஒரு செயலை உங்களை செய்ய சொன்னால், நீங்கள் என்ன செய்வீர்கள்?"

அறிவியலில் ஆரம்பித்து சட்டம் ஒழுங்கு கட்டிக்காப்பது வரை ஆளாளுக்கு ஒரு பதிலை சொல்லிக் கொண்டிருந்தனர். எந்த பதிலிலும் வரலாற்று ஆசிரியர்க்கு திருப்தி இல்லை.

"ம்ம்ம்..இன்னும் கொஞ்சம் ட்ரை பண்ணுங்க..உங்க கிட்ட இருந்து இன்னும் எதிர்பார்க்கிறேன்" - என்பது போல பார்த்தார்.

"டேய் சோவை (ஹி,ஹி வ.ஆ நமக்கு ஆசையா வச்ச செல்லப் பேரு) நீ எல்லாரும் திரும்பி பார்க்கிற மாதிரி என்ன பண்ணுவ?"

ஆழ்ந்த யோசனையோடு எழுந்தேன்...'ம்..ம்' தொண்டையை செருமியதும் 'புகழேந்தி கேள்விக்கு அரங்கனார் சொல்லப்போற பதில்' மாதிரி மொத்த வகுப்பும் அமைதியானது.

"சார், பெயர் மாற்றம் செய்வேன் சார்"

வரலாற்று ஆசிரியரின் முகத்தில் டன் கணக்கில் ஆச்சரியம். அடடா, ரொம்ப புதுசா பையன் ஏதோ சட்டம் கொண்டு வரப்போகிறான் என்பது போல பார்த்துக் கொண்டே,

"புரியலப்பா..கொஞ்சம் விளக்கமா சொல்லு" என்றார்.

"நம்ம ப்யூன் மாணிக்கம், நீங்க, நம்ம ஹெட்மாஸ்டர் ஏன் நம்ம முதலமைச்சர், பிரதம மந்திரி உட்பட எல்லார் பேரையும் ஜேம்ஸ்னு மாத்தி வைக்கணும்னு ஒரு சட்டம் கொண்டு வருவேன் சார்"

"கொண்டு வந்து"

"நம்ம மணிக்கூண்டு மேல ஏறி நின்னுட்டு நல்லா சத்தமா "ஜேம்ஸ்"-னு கூப்பிடுவேன் சார். அப்ப கட்டாயம் இந்த உலகமே திரும்பி என்னை பார்க்கும்"

ஏதோ அன்பாக சொல்லி என்னை திட்டினார். அது நமக்கு இங்கே தேவையில்லாதது. எனக்கு தெரிந்து அதன் பிறகு அவர் வகுப்பில் கேள்விகள் கேட்கப்பட்டதாய் நினைவில்லை.

ஆகவே, குழந்தைகளே இனிமே உலகத்தை திருப்புறதுக்கு ஸ்க்ரூ ட்ரைவர் தேடுற வேலைய விட்டுட்டு ஒழுங்கா படிச்சு முன்னேறுங்க.

No comments: